தலித் ஒருவர், சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் – 2
Posted March 3, 2010
on:தலித் ஒருவர் சங்கராச்சரியாவாரா, என்ற ஒரு கேள்வி அவ்வப் போது எழுப்பப் பட்டு வருகிறது. தலித் ஒருவர் சங்கராச்சாரியாராக வேண்டும் என்று கூறப்படுவது ஏன், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஏன்?
தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள் முன்னேற அரசாங்கம் பல திட்டங்களை தீட்டி செயல் படுத்தி வருகிறது. தலித் பிரிவினர் அரசுப் பணிகளில் முக்கிய பதவி வகிப்பதோடு, முதல் அமைச்சர் பொறுப்பிலும் இருக்கின்றனர். ஆனால் இன்னும் பல கிராமப் பகுதிகளில் தலித்துகள் தனியாக வாழும் சூழல் உள்ள நிலையில் தலித்துகள் முன்னேறவும், சமத்துவ சமுதாயம் அமையவும் பல முனைகளிலும் நாம் உழைக்க வேண்டியுள்ளது.
இந்தக் கால கட்டத்திலே தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக வேண்டியது அவசியமான ஒன்றா எனில், அது மிக அவசியமான ஒன்றாகவே கருதப் படுகிறது.
சமுதாயத்தில் மக்கள் பலருக்கும் மதிப்புக் கொடுக்கின்றனர். பணக்காரர்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றனர், அரசு அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுக்கின்றனர்,அரசியல்வாதிகளுக்கு மதிப்பு கொடுக்கின்றனர்.
ஆனால் அமைதியையே அணிகலனாக உடைய ஒரு ஆன்மீகவாதிக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பு அலாதியானது. ஒரு உண்மையான ஆன்மீகவாதியை சந்திக்கும் போது, மக்கள் மனதில் மனதில் நம்பிக்கை (confidence) பிறக்கிரது. தங்களைப் போல இந்த உலகப் பொருட்களில் ஆசை கொண்டு அவதிப் படாமல், மனதில் அன்பை நிறுத்திய ஆன்மீக வாதியைக் காணும் போது, அவர்கள் தாமாகவே மனம் ஒப்பி தாழப் பணிகின்றனர். ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் எண்ணத்தையே மாற்றி அவரை அமைதிப் பாதைக்கு, அன்புப் பாதைக்கும் திருப்பும் வல்லமை உடையவையாக இருந்திருக்கின்றன ஒரு ஆன்மீக வாதியின் கருத்துக்கள். எனவே அத்தகைய ஆன்மீக துறையில் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் முன்னேறி முக்கிய பங்கு வகிப்பது, மிக அவசியமானதாகிறது.
இதிலே சங்கராச்சாரியார் என்கிற ஒரு நிலையானது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது? ஆதி சங்கராச்சாரியார் என்பவர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர் ஆவார். இவருடைய தத்துவமும் பணியும் இந்து மதத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்திய ஆன்மீகத்தில், சமுதாயத்தில் இவருக்கு இணையற்ற இடம் அளிக்கப் பட்டு இருக்கிறது.
ஆன்மீகத்திலே இவருடைய சித்தாந்தம் என்ன என்றால் எல்லா ஜீவராசிகளின் உயிராகவும் இருப்பது ஒன்றேதான் என்பதுவே இவருடைய முக்கியமான சித்தாந்தம். அப்படி எல்லா உயிராகவும் இருக்கும் ஒரே பொருள் மட்டுமே நிலையானது, அழிவற்றது, மற்ற எல்லா பொருள்களும் வெறும் தோற்றமே என்பதும் இவரது உறுதியான கோட்பாடு. இந்தத் தத்துவத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இவர் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.
இதை உணரும்போது தான் ஒரு மனிதன் விடுதலை பெற்ற நிலையை அடைவதாகவும் சங்கரர் கூறினார்.
எனவே எவர் ஒருவர் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், கட்டுப்பாடான வாழக்கையினாலும், தன்னுடைய மன நிலையை உயர்த்தி எல்லா உயிர்களிலும் தன் உயிரையே காணும் அன்பு நிலையை அடைகிறாரோ அவரே சங்கராச்சாரியாரக கருதப் பட முடியும்.
ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் முப்பத்து இரண்டு வருடங்கள் மாத்திரமே. இந்த குறுகிய காலத்திலேயே அவர் ஒரு முக்கிய தத்துவத்தை வெளியிட்டு, எந்த விதமான வசதி வாய்ப்பும் இல்லாத நிலையில் கால் நடையாகவே இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்து, பல அறிங்கர்களுடன் தன்னுடைய கொள்கை உண்மையானது என்று வாதித்து, சமயம் என்பதை அன்பின் அடிப்படையிலான, அறிவின் அடிப்படையிலான , நேருக்கு நேர் அனுபவித்து உணர அறை கூவல் விடுப்பதான அறிவியலாக ஆக்கி , இந்திய துணைக் கண்டத்திலே, புரட்சிகரமான மாறுதலை உண்டு பண்ணி இருக்கிறார்.
காடுகளில் நடை பெற்று வந்த ஆன்மீக ஆராய்ச்சியை நாட்டுக்கு கொண்டு வந்தார். இவ்வாறாக இந்தியாவின் வரலாற்றில் ஆதிசங்கரர் ஒரு முக்கிய இடம் படித்தவர் ஆகி விட்டார்.
காலப் போக்கிலே இந்த சங்கராச்சாரியார் என்கிற பட்டமானது ஒரு பதவியாக ஆக்கப் பட்டு விட்டது. எனவே சங்கராச்சாரியார் என்பவற்றின் தத்துவ உண்மையும், அன்பும், கடின உழைப்பும் பின்னுக்கு தள்ளப் பட்டு சங்கராச்சாரியார் என்கிற பதவியில் இருப்பவரின் பாப்புலாரிட்டி, செல்வாக்கு, புகழ், சொத்து ஆகியவற்றுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலை தோன்றி விட்டது.
சங்கராச்சாரியார் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள பல ஆன்மீக வாதிகளையும் , இன்னும் சொல்லப் போனால் உலக அளவிலே உள்ள பல மத தலைவர்களையும் அவர்களிடம் உள்ள செல்வாக்கு, அதிகாரம், சொத்து, தொண்டர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலே மக்கள் மதிக்க செய்கிறார்கள். இவாறாக மின்னுவதை எல்லாம் பொன்னாக எண்ணும் போக்கே உள்ளது.
சங்கராச்சாரியார் ஆவது என்றால் பில்லியன் கணக்கில் சொத்துக்கள், கல்லூரிகள், சக்தி வாய்ந்த அரசியல் செல்வாக்கு இவைகளைப் பெற்று, அதனால் பலரும் வந்து பார்க்கும்படியாகவும், கும்பிட்டு செல்லும்படியாகவும் ஒரு பீடாதிபதியாக உள்ள நிலை தான் சங்கராச்சாரியார் ஆவது என்று நினைக்கிறா ர்கள்!
அப்படி என்றால் இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் பதவிக்கும், பிற மாண்புமிகு, மான மிகு பதவிகளுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
இப்படிப்பட்ட “சங்கராச்சாரியார் பதவி” வேண்டுமென்றால், அரசாங்கமே ஆங்காங்கே (ஐ.ஐ.டி. களை உருவாக்குவது போல) மடங்களை உருவாக்கி, அருகிலே கோவில், அதற்க்கு நிலங்களையும், கல்லூரிகளையும் அளித்து தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை “சங்கராச்சாரியார்” ஆக நியமித்து விடலாமே!
புத்தர், சங்கரர், அப்பர், விவேகானந்தர் ஆகியோர் தங்கள் ஆன்மீகப் பணியைத் துவக்கிய போது அவர்களிடம் பணம், அரசியல் செல்வாக்கு இருந்ததா?
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணத்தையோ, செல்வாக்கையோ நம்பியது உண்டா? பணமோ, தங்கமோ, செல்வாக்கோ, பதவியோ-இந்த உலகத்தில் மக்கள் அடைய விரும்பும் எந்த பொருளும்- அவர்களைக் காக்க முடியாது என்பது தானே ஆன்மீகத்தின் அடிப்படை?
எனவே ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது,விவேகானந்தர், ஆதி சங்கரர், புத்தர் போன்ற நிலையை அடைவது என்பதே சரியானது. அது சிறிது கடினம் என்றாலும் நிச்சயம் முடியும். கடின உழைப்பு, விடா முயற்சி இவைதான் தேவை. அதை அப்படி ஆக விரும்பும் ஒருவர்தான் அந்த உழைப்பை அளிக்க வேண்டும். இந்த நிலையை அடைய பணமோ, அரசியல் செல்வாக்ககோ உதவ முடியாது.
ஆனால் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவது, “சங்கராச்சாரியார் பதவியை அடைவது” ஆவது என்றால் அது சிறிது எளிதானது. அதற்க்கு தேவை பணம், அரசியல் செல்வாக்கு, ஆள் பலம் இவைதான்.
ஒரு மனிதரின் கட்டுப்பாடு, விடா முயற்ச்சி, கடின உழைப்பு , ஆராய்ச்சி இவற்றின் மூலம் மட்டுமே ஒருவர் தான்னை தானே சங்கராச்சாரியார் ஆக்கிக் கொள்ளவே முடியும்.
எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒன்றே என்கிற தத்துவத்தை முக்கியக் கருத்தாக அறிவித்தவர். அந்த நிலையை நேரடியாக உணரும் வாய்ப்பு மனிதர்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் ஆதி சங்கரர். எனவே தலித் ஒருவர் சங்கராச்சாரியார் நிலையை அடைந்தால் ஆதி சங்கரரின் ஏகத்துவ சித்தாந்தம் இன்னும் உறுதி படுத்தப் படும். உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களும் -அவர்கள் ஜப்பானியரோ, பிரெஞ்சு காரரோ, ருஷியரோ, நீகிரோ இனத்தவரோ – சங்கராச்சாரியார் நிலையைஅடைந்தால் அது அந்த தத்துவத்தை இன்னும் உறுதி செய்தது ஆக்கும். முக்கியமாக பெண்களும் இந்த நிலையை அடைவது அந்த தத்துவத்தின் ஏகத்துவக் கொள்கையை இன்னும் இன்னும் அதிகமாக உறுதி செய்தது ஆகும்.
இந்தியாவின், இந்து மதத்தின் உண்மை ஆன்மீக தலைமை வெற்றிடமாக உள்ளது. தலித் சமுதயத்தினர் அதைப் புரிந்து கொண்டால் அந்த தலமை இடத்தை அவர்கள் நிரப்பலாம்.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே!
ஆதி சங்கரரின் அன்பையும், அறிவையும், தன்னலமற்ற உழைப்பையும், செயல் திறனையும் பாரட்டவும் தலை வணங்கவும் இந்த தருணத்தில் நினைவு செய்கிறேன்!
30 Responses to "தலித் ஒருவர், சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் – 2"
///எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒன்றே என்கிற தத்துவத்தை முக்கியக் கருத்தாக அறிவித்தவர். அந்த நிலையை நேரடியாக உணரும் வாய்ப்பு மனிதர்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் ஆதி சங்கரர். எனவே தலித் ஒருவர் சங்கராச்சாரியார் நிலையை அடைந்தால் ஆதி சங்கரரின் ஏகத்துவ சித்தாந்தம் இன்னும் உறுதி படுத்தப் படும். உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களும் -அவர்கள் ஜப்பானியரோ, பிரெஞ்சு காரரோ, ருஷியரோ, நீகிரோ இனத்தவரோ – சங்கராச்சாரியார் நிலையைஅடைந்தால் அது அந்த தத்துவத்தை இன்னும் உறுதி செய்தது ஆக்கும். முக்கியமாக பெண்களும் இந்த நிலையை அடைவது அந்த தத்துவத்தின் ஏகத்துவக் கொள்கையை இன்னும் இன்னும் அதிகமாக உறுதி செய்தது ஆகும்.///
மிகச் சிறந்த கட்டுரை.அறிவியலும் இந்த ///எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒன்றே என்கிற தத்துவத்தை/// நோக்கியே செல்கிறது.
அழகான, ஆழமான oru கட்டுரை. சொல்லவந்த கருத்தை நிதானமாக எடுத்துரைத்து உள்ளீர்கள்.. திருச்சிக்காரனுக்கு நிகர் திருச்சிக்காரன்தான்.
உங்கள் பதிவை மின்னஞ்சலில் தெரிவித்தமைக்கு நன்றிகள்..
திருச்சி ஐயா,
ஏற்கனவே இன்றைக்கு ‘தலித்’என்று அழைக்கப் படும் சமுதாயத்தில் இருந்து மாபெரும் வேதாந்த ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். நமது சமீப காலங்களில் எடுத்துக் கொண்டால்
ஸ்ரீ நாராயண குரு (பூர்வாசிரமத்தில் ஈழவர்)
சுவாமி சகஜானந்தர் (பூர்வாசிரமத்தில் அரிசனர்)
மாதா அம்ருதானந்தமயி (பூர்வாசிரமத்தில் மீனவர்)
இவர்கள் மானுட ஆன்மநேய விடுதலைக்காக அறைகூவியவர்கள்.. எந்த “பீடாதிபதி”யும் விட அதிகமாக நடைமுறையில் அத்வைதத்தை வாழ்ந்து காட்டியவர்கள். இந்தப் புனிதப் பாரம்பரியம் தொடரட்டும் என்று வாழ்த்துவோம் – இது இனிமேல் தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை..
அருமை நண்பரே, உங்களது சலியாத பதில்களை தமிழ்ஹிந்து தளத்தில் கண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.
தலித்துகள் மதிப்பு பெறக்கூடிய முன்னேற்றத்துக்கு, இது போன்ற யோசனைகள் முதற்படி, ஆனால் நடக்காது என்பதும் புரிகிறது, இந்து இயக்கங்கள் ஒரு போர்க்குணத்தோடு தலித்துகளுக்கு முழுமையான வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருதல் இன்றைய முக்கிய தேவை. இல்லையேல் மத மாற்றங்கள் தவிர்க்கமுடியாது, அதை தடுக்கும் தார்மீக உரிமையும் இந்து இயக்கங்களுக்கு, இந்து என்று சொல்லிக்கொள்ளும் எவருக்குமோ இல்லை.
பிராமணர்கள் மட்டும் தான் வேதம் படிக்கலாம் என்பது உண்மை!!!
அதே நேரத்தில், எந்த வருணாசிரம பிரிவுகளில் இருந்து, யார் வேண்டுமானாலும், பிராமணன் ஆகலாம் என்பதும் உண்மை. பிராமணன் க்ஷத்ரியர் ஆக முடியும், க்ஷத்ரியர் சூத்திரர் ஆக முடியும், etc., etc.,
வருணாசிரம பிரிவு என்பது தொழிலால் பிரிக்கப்படுவது. இந்த காலத்து பாஷையில் விளக்க வேண்டுமென்றால், இப்போது இருக்கிற software engineer மாதிரி. Mechanical engg., civil engg., படித்த யார் வேண்டுமானாலும் software engineer ஆகலாம். ஆனால் software engineer ஆக உள்ள ஒருவன் தான் programming எழுத / செய்ய முடியும் என்பது போலவே தான்.
இதை சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரகுடுக்கைத் தனமாக பிராமணர்களை உசத்தி கூறியிருக்கிறது. அவர்கள் தான் தலையிலிருந்து பிறக்கிறார்கள். சூத்திரர்கள் காலிருந்து பிறக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது பற்றி சண்டையிடுகிறோம். in fact, பெருமாளை எடுத்துக் கொண்டால் அவர் உடம்பிலே விசேஷமானது பாதம் தான். அதை தான் சடாரியாக எல்லா மக்கள் தலையிலும் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் சூத்திரர்கள் தான் உயர்ந்தவர்கள். “பொற்பாதமே சரணம்”, “பொன்னடிகளே போற்றி” என்றுதான் சொல்லுகிறார்கள். யாரும் பெருமாள் தலையயோ, மார்பையோ, தொடையையோ கொண்டாடவில்லை. (பிரம்மா பற்றி இங்கே தேவையில்லை.) பாதத்திலிருந்து வந்ததால் இழிவு என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். தலை கல்வியையும், மார்பு வீரத்தையும், தொடை வியாபாரத்தையும், பாதம் சேவையயும் தான் குறிக்கிறது.
புராணங்கள் எல்லாம் dramatize பண்ணி எழுதப்பட்டவை. வைரமுத்து சொன்ன மாதிரி “கவிதைக்குப் பொய்யழகு”. அந்த மாதிரி தான்.
உங்கள் கருத்து நல்ல கருத்து. சமூகத்திற்கு இந்த விஷயத்தை எப்படி புரியவைப்பது என்பது தான் மிகப்பெரிய கேள்வி!!!
திருச்சிக்காரன், வாழ்த்துகள்!!!!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் என் மனம் புண்படும் மாதிரி எதுவும் சொல்லவில்லை. “எல்லா மக்களுக்கும் சமத்துவம் இந்தியாவில் வேண்டும்” என்ற உங்கள் நல்லெண்ணத்தை மெச்சுகிறேன். எனக்கும் அது தான் ஆசை.
//யமன் அளித்த பதிலை பிராமணர் மட்டுமே படிக்கலாம்//
மேலே சொன்ன விஷயத்தில் எந்தவித தவறும் இல்லை. அதே போல், நான் முன்னே சொன்ன விஷயத்தை மறக்க வேண்டாம் – யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்திற்கும் மாறலாம்.
அதிர்ச்சியாக இருக்கிறதா? உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.சிவில் இன்ஜினியரிங் படித்த ஒருவர் தான் வீடு கட்ட வேண்டும் என்பது நியதி. நீங்கள் ஸாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படித்திருந்தால் வீடு கட்ட முடியாது, கூடாது. உங்களுக்கு சிவில் இன்ஜினியரிங் terminologies புரியுமா? புரியாது. புரியாமல் வீடு கட்டினால் வீடு இடிந்து விட்டும். வேண்டுமென்றால், சிவில் பட்டம் வாங்கிய பின் வீடு கட்டலாம். ஸாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படித்த நீங்கள் சிவில் படிக்கு எந்தவித தடையும் இல்லையே! அதே போல், இதய மருத்துவம் படித்த ஒருவர் தான் இதய கோளாறு சரிபார்க்க முடியும், பார்க்கணும். நீங்கள் பல் மருத்துவம் படித்து விட்டு இதய சிகிச்சை செய்யக் கூடாது.
பயிற்சி பெற்ற ஒருவன் தான் கிரிக்கெட்டில் விளையாடலாம். இந்த மாதிரி சொல்லி கொண்டே போகலாம். (பயிற்சி இல்லாத அரசியல்வாதிகளை இங்கே உதாரணம் காட்ட வேண்டாம். 🙂 ).
இந்த மாதிரி விஷயங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது.
வாகனம் ஓட்டும் பொழுது செல்ஃபோன் உபயோகபடுத்துக் கூடாது என்பது சட்டம். இல்லை, ஒருவன் எனக்கு திறமை இருக்கிறது, அதனால் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவேன் என்றால் எப்படி? அப்படி சொல்பவர்களுக்கு அபராதம் சட்டத்தில். நரகம் வேதத்தில். மனிதனை முறைபடுத்த சட்டம் தேவை. வாழ்க்கையை நெறிபடுத்த வேதம் தேவை.
பிராமணன் என்பதை ஜாதியாக பார்க்காமல் ஒரு தொழிலாளியாக பார்க்க வேண்டும். நன்றாக வில் வித்தை பயிற்சி பெற்ற ஒருவன் தான் க்ஷத்ரியன் ஆக வேண்டும். பிராமணன் க்ஷத்ரியன் ஆக வேண்டுமென்றால் அவன் வில் வித்தை கற்க வேண்டும். அதே போல் எல்லா வர்ணத்திற்கும் பொருந்தும்.
இதில் தவறு இல்லையே? யோசியுங்கள்.
//பிராமணர்கள் வீட்டில் ஒரு குழந்தை இறந்தால் அவர்களால் அந்தக் குழந்தை உயிர்ப்பிக்க முடியுமா?///
நீங்கள் எதற்காக இதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
திருச்சிகாரரே!
நன்றி. வேதத்தில் சொன்ன பிராமணன் இப்போது இல்லை, நிஜம் தான். ஆனால் நீங்கள் சொன்ன உபநிடதம் உதாரணத்திற்கு விளக்கம் கொடுத்தேன். அதை தப்பாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்கு.
வேதத்தில் நெற்றியிலிருந்து பிறந்தால் ஒசத்தி என்று சொல்லவில்லை. அதெல்லாம் மக்களின் அறியாமயால் வந்தது. in fact, பெருமாளைப் பொறுத்தவரை பாதம் தான் ஒசத்தி. இதை யாரும் சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லல்படுகிறார்கள்.
கீழே கீதைக்கு பாரதி கூறும் விளக்கத்தைப் படியுங்கள்.
(5ம் அத்தியாயம், 18வாது ஸ்லோகம்)
கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமின்றி எல்ல உயிர்களுக்குள்ளும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று கூறுகிறான்.
திருச்சிகாரரே!
நன்றி. வேதத்தில் சொன்ன பிராமணன் இப்போது இல்லை, நிஜம் தான். ஆனால் நான் நீங்கள் சொன்ன உபநிடதம் உதாரணத்திற்கு விளக்கம் கொடுத்தேன். அதை தப்பாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்கு.
வேதத்தில் நெற்றியிலிருந்து பிறந்தால் ஒசத்தி என்றெல்லாம் சொல்லவில்லை. அதெல்லாம் மக்களின் அறியாமயால் வந்தது. in fact, பெருமாளைப் பொறுத்தவரை பாதம் தான் ஒசத்தி. இதை யாரும் சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லல்படுகிறார்கள்.
கீழே கீதைக்கு பாரதி கூறும் விளக்கத்தைப் படியுங்கள்.
(5ம் அத்தியாயம், 18வாது ஸ்லோகம்)
கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமின்றி எல்ல உயிர்களுக்குள்ளும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று கூறுகிறான்.
எல்லாம் கடவுள் மயமன்றோ. பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், ……… நாராயணன், …………. நாராயணன்……
திருச்சிக்காரருக்கு, வணக்கம். ஊர்பாசம்தான் உங்கள் வலைத்தளத்திற்கு என்னை இழுத்து வந்தது. மேட்டருக்கு வருவோம். நம்ம மாவட்டத்திலே தீண்டாமை குறித்த ஓர் ஆய்வுக்காக் நாங்கள் தா, பேட்டைப் பகுதிகளில் சுற்றி வந்த போது கிடைத்த தகவல்கள்
** அவர்கள் வசிக்கும் பகுதிக்கு திருவிழா காலங்களில் சாமியும் தேரும் வரவேண்டும்.
** அவர்களுக்கு தலை முடி வெட்டிவிட அந்த ஊர் மருத்துவர் சம்மதம் தெரிவிக்கணும் (ஓசிக்கு இல்லை, காசுக்குத்தான்.. முடிவெட்டிக்கொள்ளவேண்டுமென்றால் அவர்கள் டவுன்பஸ் பிடித்து அருகிலுள்ள பெரிய ஊருக்குத்தான் போக வேண்டும்)
** டீ கடைகளில் அவர்களுக்கும் கண்ணாடி டம்ளர்களில் டீ தர வேண்டும்.
** சேரிகளில் ரேஷன் கடைகளும் போஸ்டாபீசும் வேண்டும்.
** சேரிகளில் டவுண்பஸ் நின்று பள்ளி செல்லும் தலித் குழந்தைகளை ஏற்றிச் செல்லவேண்டும்.
** குடிநீர் சமமாக வழங்கப்பட வேண்டும்.
** குப்பைகள் அள்ளுதலும் சாக்கடை சுத்தம் செய்யப்படுதலும் அவர்கள் பகுதியிலும் தடையின்றி நடைபெறுதல் வேண்டும்.
(தலித்துகள் கிராமங்களில் தொடக்கப்பள்ளி அதிகபட்சம் உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பெறுகிறார்கள். விரல் விட்டு எண்ணப்படுபவர்களே மேல்நிலைக்கல்வியும் பட்டப் படிப்பும் படிக்கிறார்கள்)
இதிலே எங்கே ஆன்மீகம்? சங்கராச்சாரியார் பட்டம்? கொஞ்சம் வலுவா இயக்கம் நடத்தி கோவில் சென்றால் சாதி இந்துக்கள் ஒன்று கோவிலைப் பூட்டி வைத்து விடுகிறார்கள், அல்லது அவர்கள் வேற கோவிலை அவர்களுக்காக கட்டிக் கொள்கிறார்கள். இதிலே த்வைதக் கருத்துக்கள் எப்படிக் கவ்வி பிடிக்கும்? இதுதான் இன்றைய உண்மை நிலைமை.
வானிலிருக்கும் ஆகாயம் வேண்டாம்.
காலின் கீழே உள்ள தரை நழுவாதிருந்தால் அதுவே போதும் என்ற கனிமொழி கவிதை தான் நினைவுக்கு வருகிறது.
ஆனந்த விகடனில் கார்பரேட் சாமியார்கள் பற்றி திருமாவேலன் கட்டுரையைப் படிங்க சார். இவங்களுக்கு எதுக்குசார் கல்வி நிறுவனம்,ஆடம்பர பங்களாக்கள், ஆள், அம்பு, எடுபிடி? ஏது சார் இவ்வளவு காசு? எந்த சாமியரும் நாட்டுக்குத் தேவையேயில்லை. நாகநாதன்.கே., திருச்சி
அன்புள்ள திருச்சிக்காரர் அவர்களுக்கு, வணக்கம். தங்களுக்கு என்று ஒரு வலைப்பூ இருப்பது இப்பொழுதுதான் அறிகின்றேன். தலித் சங்கராச்சாரியர் ஆகவேண்டுமா? சங்கராச்சாரியர் ஸ்தாபித்ததாகக் கூறப்படும் ஸ்ரீமடங்களுக்குத் தலைவரக வேண்டுமா? பின்னதற்குத்தான் ஒட்டியும் வெட்டியும் பேசுவதற்கு மக்கள் வருவர். ஏனெனில் சங்கரருடைய சித்தாந்தத்தை ஓதி உணர்ந்து அத்துவிதப் பணி செய்யும் பிராமனர் அல்லாத பல துறவிகலை நானறிவேன். சங்கரர்மடங்கள் வேதக்கல்வியைப் பிராமணர்களுக்குப் போதிக்க நிறுவப்பட்டவை. அங்கு தலித்துகளுக்கு இடமில்லை. ஆனால் வேதாந்தக் கல்வியை போதிக்கும் திருமடங்கள் உள்ளன. உண்மையிலேயே வேதாந்தக்கல்வியில் ஆர்வம் உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். நான் சங்கரருடைய தத்துவக் கொள்கையிலிருந்து பாறுபட்ட கருத்துடையவன். ஆனால் அவருடைய பக்தி நூல்களிலும் சந்நியாச தர்மத்திலும் பெருமதிப்பு உடையவ்ன். சங்கரர் விதிக்கும் சந்நியாச தருமத்திற்கு தலித்துக்குப் பழக்கமான வாழ்க்கை முறையும் சூழலும் பெருந்தடையாக இருக்கும். தலித் அவற்றைக் கடந்து வர மனவ்லியும் வைராக்கியமும் பெரிய அலவில் வேண்டும். ஒரு நாராயண குருவைப் போலவோ அல்லது ஐயன்காளியைப்போலவோ ஒருவரை அந்தச் சமூகம் பெறவேண்டும். சங்கராச்சாரியர் வேண்டாம்; ஆதிசங்கரர் வேண்டும். உங்களுடைய சிந்தனை வலிமை பெற வேண்டும்.
1 | ram
March 3, 2010 at 4:18 pm
ஆதி சங்கரர் நான் தான் சங்கரன் என்று தானே கூறிக்கொள்ள வில்லை. ஆதி சங்கரரின் ஞானத்தேடல் போல தானெ ஞானம் பெற்றால் ஞாலம் அவனை ஏற்றுக்கொள்ளும். யார் கேட்கப் போகிறார்கள். பிறகு குமுதம் ஆனந்த விகடனில் வாரத்தொடர் போடுவார்கள். கார்பரேட் சாமியாராகிடலாமே.
http://www.hayyram.blogspot.com
thiruchchikkaaran
March 3, 2010 at 6:19 pm
ஆதி சங்கரர் போல எல்லா உயிரையும் ஒன்றாகவே , தானாகவே எண்ணுபவர் எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். அவரை சங்கராச்சாரியார் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை. அழைத்துதான் ஆக வேண்டும்.
ஆன்மீகத்துக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சிலரை எல்லாம் சங்கராச்சாரியார், சங்கராச்சாரியார் என்று அழைக்கும் போது உண்மையான அத்வைதியை சங்கராச்சாரியார் என்று அழைத்தால் என்ன? கண்டவரையும் சங்கராச்சாரியார் என்று அழைத்து அந்தப் பெயருக்கு உள்ள மரியாதையையே கெடுத்து வைத்து இருக்கிறார்கள்.
அந்த நிலையில் எவர் ஒருவர் சங்கராச்சாரியார் என்று அழைக்கப் படத் தகுதியானவரோ, அவரை அப்பெயரிட்டு அழைத்தாவது சங்கராச்சாரியார் என்ற பெயரின் அர்த்தமாவது நிலைக்கும் படி செய்யலாமே.